செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு தொடக்க விழாவில், பிரதமருக்கு தமிழக அரசு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்து பேசினார். துணை ராணுவப்படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திற்கு பாதுகாப்பபு கோரியும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் அண்ணாமலை ஆளுநரிடம் பேசியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ஆளுநரை சந்தித்த பிறகு, பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு தொடக்க விழாவில், பிரதமருக்கு தமிழக அரசு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் பிரதமருக்கே போதுமான பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றால், சாமானிய மக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் இது தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்திருப்பதாகவும் கூறினார்.
பிரதமரின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் திட்டத்திற்கு தமிழகத்தில் 69 லட்சம் குடிநீர் கனெக்ஷனுக்கு மாநில அரசின் மூலமாக மத்திய அரசு நிதி அளித்திருப்பதாகவும் ஆனால், சமீபத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களில் பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர்களிடம், தண்ணீர் குழாய் பொய்யாக போட்டு அதன் மூலம் ஊழல் நடந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு அவசரச் சட்டம் ஆளுநர் ஒப்புதல் அளித்தும் இதுவரை திமுக அதை அமல்படுத்தவில்லை. எல்லா தவறுகளையும் ஆளுநரின் மீது போட்டுவிட்டு மாநில அரசு தப்பிக்க முயற்சிக்கிறது. பாஜகவை பொறுத்தவரை ஆன்லைன் ரம்மி மூலமாக இன்னொரு உயிர் போகக் கூடாது. காவல்துறை முதல்வரின் இமேஜ் விஷயத்தில் தான் கவனம் செலுத்துகிறது, தவிர சாதாரண மக்களை பாதுகாப்பதற்கு நேரமில்லை” என குற்றம் சாட்டினார்.