திரைப்பட இயக்குநர் பாரதிராஜா வயது முதிர்வு மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், பணம் இல்லாமல், மருத்துவமனையில் தொடர்ந்து இருப்பதாக தகவல் பரவியது. மேலும், பாரதிராஜா குறித்து பல்வேறு தகவல்கள் பரவின.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து, இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது:
பாரதிராஜாவின் உடல்நிலை சீராகவும், ஆரோக்கியமாகவும் உள்ளது. பழைய பாரதிராஜாவை பார்க்கும் அளவுக்கு இருக்கிறார். பணத்துக்கு வழியில்லாமல், மருத்துவமனையில் இருப்பதாக தவறான செய்திகள் சில ஊடகங்களில் வெளி வந்தது. தவறான செய்தியை பரப்ப வேண்டாம். என்னுடைய பணத்தில் தான் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.
பாரதிராஜா இப்போதே படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறார். அவருக்கு எல்லாமே சினிமாதான். அவருக்காக, சில படங்களின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருக்கும்போது அவர் நடித்த படங்களைப் போட்டு காட்டினோம். திருச்சிற்றம்பலம் படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.
இவ்வாறாக அவர் பேசினார்.