தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் இருந்து 8 சீட்டாகள் பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு கொண்டுவரப்பட உள்ளது.
உலகிலேயே வேகமாக ஓடக்கூடிய விலங்கினம் தான் சீட்டா என்று அழைக்கப்படும் சிவிங்கி புலிகள். இவை சுமார் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்திலிருந்து 130 கிலோ மீட்டர் வரை ஓடக்கூடிய ஆற்றல் பெற்றவை. இந்தச் சீட்டாகள் இந்தியாவில் முற்காலத்தில் அதிகளவில் இருந்தன. அதன் பின்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி செய்த மன்னர்கள், ஆங்கிலயேர்கள் உள்ளிட்டோர் பொழுதுபோக்கிற்காக சீட்டாக்களை வேட்டையாடி வந்தனர்.
இதன்காரணமாக, ஒரு கட்டத்தில் இந்த சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இந்தியாவில் கடைசியாக 1947 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்படாத மாநிலமாக இருந்த சத்தீஸ்கரில் ஒரு சீட்டா கண்டறியப்பட்டது. அதன்பின்பு, 1952 ஆம் ஆண்டு சீட்டாகள் நாட்டின் எந்த பகுதிகளிலும் இல்லை என அறிவிப்பு வெளியானது.
அப்போதிலிருந்து இப்போது வரை, இந்தியாவில் எங்கும் சீட்டாக்கள் இல்லை. இதன் காரணமாக சீட்டாக்களை வாங்குவதற்கு நமீபியாவிடம் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, நமீபியாவிலிருந்து இந்தியாவுக்கு 5 ஆண் சீட்டாக்கள் மற்றும் 3 பெண் சீட்டாக்கள் கொண்டுவரப்பட உள்ளன. இப்படி செய்வதால் இந்திய நாட்டில் சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு, அதிகமான சீட்டாக்கள் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவுக்கு இந்த 8 சீட்டாக்களும் அழைத்துவரப்பட உள்ளன. மேலும், இந்தியக் காடுகளில் சீட்டாக்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாளான அன்று அவரே தொடங்கி வைக்க உள்ளார்.
சீட்டாக்கள் விடப்படுவதை முன்னிட்டு குனோ தேசிய பூங்காவைச் சுற்றிலும் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் உள்ள தெரு நாய்களுக்கும் நாட்டு நாய்களுக்கும் என சுமார் ஆயிரம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. ரேபிஸ் வைரஸ் நோயிலிருந்து சீட்டாக்களை பாதுகாப்பதற்காக இந்த தடுப்பூசி போடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி வர்மா தெரிவித்துள்ளதாவது:
சீட்டாக்கள் நாய்களை கடித்துவிடும் என்பதற்காக தடுப்பூசி செலுத்தப்படவில்லை. பொதுவாக சிறுத்தைகள் ஒரு விலங்கை வேட்டையாடி கொன்று விட்டு பாதி பகுதியை உண்டு விட்டு மீதி பகுதிகளை அப்படியே விட்டு சென்று விடும். பிறகு, தனக்கு எப்போது பசி எடுக்கிறதோ, அப்போது வந்து மீண்டும் அதை உண்ணும்.
இதனிடையே, சிறுத்தை சாப்பிட்டு சென்ற மீதி மாமிசத்தை ரேபிஸ் பரவியுள்ள நாய்கள் சாப்பிட்டால், அந்த இறைச்சியிலும் ரேபிஸ் பரவி இருக்கும். மீண்டும் அந்த இறைச்சியை உண்ண வரும் சிறுத்தைக்கும் ரேபிஸ் பரவ வாய்ப்புள்ளது. அதன் மூலம், பிற வன விலங்குளுக்கும் இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது.
அதனால், இந்த ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இப்போது ஏறத்தாழ நிறைவு பெற்றுவிட்டது. வனவிலங்கு சரணாலயத்தை சுற்றியுள்ள கால்நடைகளுக்கு இதுபோன்று தடுப்பூசிகள் செலுத்தப்படுவது வழக்கம் தான். ஆனால், தற்போது நாய்களை மட்டும் குறிவைத்து தடுப்பூசி செலுத்தப்படுவது இதுவே முதல் முறை.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.