காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணத்தின் போது இன்று காலை அக்கட்சியின் மூத்த தலைவர் கிருஷ்ண குமார் பாண்டே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. அன்று முதல் தற்போது வரை இந்தப் பயணம் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்தப் பயணம் தமிழகம், கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களைக் கடந்து நேற்று மராட்டிய மாநிலத்திற்குள் நுழைந்தது.
ஒவ்வொரு மாநிலத்தில் நுழையும் போதும் அம்மாநிலத்தின் மூத்த தலைவர்கள் நடைப்பயணத்தில் கலந்து கொள்வர். இதன்படி மராட்டிய மாநிலத்தில், இன்று காலை காங்கிரஸ் சேவா தளத்தின் பொதுச் செயலாளரும், மூத்த தலைவருமான கே.கே.பாண்டே நடைப்பயணத்தில் கலந்துகொண்டார்.
அப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளரான ஜெய்ராம் ரமேஷுடன் தேசியக் கொடியை ஏந்திச் சென்ற கேகே பாண்டே, திடீரென கொடியை அவரிடம் கொடுத்துவிட்டு கீழே மயங்கி விழுந்தார். பிறகு உடனே அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று பிற்பகல் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.கே.பாண்டேவின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
மேலும் ராகுல் காந்தி, கடைசி நிமிடம் வரை அவர் தேசிய கொடியை ஏந்தினார் என குறிப்பிட்டு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இடஓதுக்கீடு தீர்ப்பின் எதிரொலி; கூடுகிறதா அனைத்துக்கட்சி கூட்டம்?