ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டியில் இந்தியா 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் நடத்திய, ஆசிய அளவிலான 6-வது கூடைப்பந்து போட்டி மலேசியாவின் கோலாலம்பூரில் கடந்த 13-ம் தேதி தொடங்கியது. 17 வயதுக்கு உள்பட்ட ஆடவருக்கான 3*3 ஆசிய கோப்பை தொடரில் ஆரம்பம் முதலே இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தது. இதன் விளைவாக இந்திய அணி காலிறுதிக்குள் நுழைந்தது. காலிறுதியிலும் அபாரமாக விளையாடிய இந்திய அணி ஜோர்டானை வீழ்த்தியது.
இதன்பிறகு, அரையிறுதியில் சீன தைபேவுடன் மோதியது. இப்போட்டியிலும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 21-20 என்ற கணக்கில் சீன தைபே அணியை தோற்கடித்தது.
இதைத்தொடர்ந்து, இறுதிப்போட்டியில் இந்திய அணி ஜப்பான் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியிலும் இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 21-17 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோல்வியை தழுவியது. இருப்பினும், வெள்ளி பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது.
மேலும், இந்த ஆசிய சர்வதேச கூடைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றதன் அடிப்படையில் உலகக் கோப்பை போட்டியில் தனக்கான இடத்தை உறுதி செய்தது இந்திய அணி. இதன் மூலம், 18 வயதுக்கு உள்பட்ட ஆடவருக்கான 3*3 உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டிக்கு கடந்த 11 ஆண்டுகளில் முதல் முறையாகத் தகுதிபெற்றுள்ளது.
இதையும் படிங்க: முகமது ஷமிக்கு கடைசி ஓவர் மட்டும் கொடுத்தமைக்கு காரணம் என்ன? – ரோஹித் சர்மா சொன்ன பதில்