உலக பாரம்பரியச் சின்னமாக போற்றப்படுகின்ற தஞ்சை பெரிய கோயிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாவட்டம் என்ற நிலையை எட்ட வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று புகழ்ப்பெற்ற தஞ்சை பெரிய கோயில் வளாகம் ‘நெகிழி இல்லா பகுதி’ என அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தின் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி நெகிழி இல்லா பகுதி என அறிவித்தார். இதில் நூறுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பெரிய கோயில் வளாகம் முழுவதும் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.
தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மீண்டும் மஞ்சப்பை, துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கடைகளுக்கு செல்கையில் துணிப்பைகளை கொண்டு செல்ல வேண்டும் என மாணவ-மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பிளாஸ்டிக் பயன்படுத்தும் பெரிய கடைகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும், துணிக்கடை போன்ற கடைகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும், சில கடைகளுக்கு ஆயிரம் ரூபாயும் என முதல் தவணையாக அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து மீண்டும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் வட்டாச்சியர் மாநகர் நல அலுவலர் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக பாஜகவினருக்கு ஜே.பி.நட்டாவின் வருகை புதிய உத்வேகம்- பாஜக அண்ணாமலை