பணகுடி காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு சக காவலர்கள் இணைந்து வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே அமைந்துள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் திவ்யா. இவர், ராதாபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணி புரிந்து வந்தார். இவருக்கும், செட்டிகுளத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. காவலர் திவ்யா 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ராதாபுரம் காவல் நிலையத்தில் இருந்து திவ்யா பணகுடி காவல் நிலையத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
கர்ப்பிணியாக புதிய காவல் நிலையத்தில் பொறுப்பேற்ற திவ்யாவுக்கு காவல் நிலையத்தில் வைத்தே வளைகாப்பு நடத்த பணகுடியில் பணிபுரியும் சக காவலர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, உதவி ஆய்வாளர்கள் அருண் ராஜா தலைமையில் காவலர் திவ்யாவிற்கு வளைகாப்பு வைபவத்தை வெகு விமரிசையாக நடத்தினர்.இந்த வளைகாப்பு நிகழ்ச்சியின் போது வீட்டில் உறவினர்கள் நடத்துவதைப் போன்றே திவ்யாவிற்கு வளையல்கள் அணிவித்தும் சந்தனம், குங்குமம் வைத்தும் விருந்து உபசாரம் செய்தும் குடும்ப நிகழ்ச்சியாக நடத்தினர்.
திடீரென தனக்கு நடைபெற்ற இந்த வளைகாப்பு நிகழ்வை பார்த்து காவலர் திவ்யா இன்ப அதிர்ச்சி அடைந்தார். காவல் நிலையத்தில் வளைகாப்பு நடந்த இந்த நிகழ்வு சக பெண் காவலர்களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுத்துள்ளதால் புத்துணர்ச்சியுடன் காணப்படுகின்றனர்.
சொகுசு கப்பல் புதுச்சேரிக்குள் நுழையுமா? – தமிழிசை சவுந்தராஜன்!