ஆஸ்திரேலிய தேர்வுக்குழுவினர் பதவி விலக வேண்டும் என முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. மார்ச் 9-ஆம் தேதி 4-ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தேர்வு பற்றி இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியதாவது:
ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் பலரும் ஆஸ்திரேலியா வீரர்களைத்தான் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் ஆஸ்திரேலியா தேர்வுக்குழுவினர்களே,
முதல் இரு டெஸ்டுகளில் விளையாடாமல் இருந்த ஹேசில்வுட், ஸ்டார்க், கிரீன் ஆகிய மூவரையும் அவர்கள் எப்படித் தேர்வு செய்யலாம்? இதனால் பாதித் தொடர் வரைக்கும் 13 வீரர்களில் இருந்துதான் 11 பேரைத் தேர்வு செய்யவேண்டிய நிலைமை, அணி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே அணியில் உள்ள ஒரு வீரரைப் போலவே திறமை கொண்ட மற்றொரு வீரரான மேத்யூ குனேமனைத் தேர்வு செய்தார்கள். ஒரு வீரரால் சரியான முறையில் விளையாட முடியாது எனத் தெரிந்தால் எதற்காக அந்த வீரரை டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்ய வேண்டும்? இதனால் 12 பேரிலிருந்து 11 பேரைத் தேர்வு செய்துள்ளது அணி நிர்வாகம்.
முதல் இரு டெஸ்டுகளில் தோற்ற ஆஸ்திரேலிய அணி அடுத்த இரு டெஸ்டுகளில் வென்றாலும் ஆஸ்திரேலியா தேர்வுக்குழுவினருக்கு ஓரளவாவது பொறுப்பு இருந்தால் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
நிறைவடைந்தது ருத்ரன் படப்பிடிப்பு; ரிலீஸ் எப்போது தெரியுமா?