ஆஸ்திரேலியாவில் இந்து கோயில் சூறையாடல் தொடர்பாக போராட்டம் நடத்தியவர்கள் மீது காலிஸ்தான் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப்பை பிரித்து இரு பகுதியையும் இணைத்து காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்க வேண்டுமென்று நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த காலிஸ்தான் அமைப்பு இந்தியாவில் ஒடுக்கப்பட்ட ஒன்றாகும்.
இருப்பினும், ஆஸ்திரேலியா போன்ற அயல்நாடுகளில் காலிஸ்தான் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த சில வாரமாக ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோயில்களை சேதப்படுத்தி வருகின்றனர்.
கடந்த 16-ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள சிவா- விஷ்ணு கோயிலுக்குள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள். இதற்கு முன்னதாக, கடந்த 12-ஆம் தேதி விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள சுவாமி நாரயண் கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சூறையாடினர்.
இச்சம்பவம் தொடர்பாக தற்போது விக்டோரியா மாகாண போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் 3-ஆவதாக ஒரு இந்து கோயில் கடந்த ஜனவரி-23ஆம் தேதி தாக்குதலுக்குள்ளானது.
மேலும், இந்த தொடர் சம்பவங்கள் குறித்து இந்திய தூதரகம் சமீபத்தில் கடும் கண்டனங்கள் தெரிவித்தது. இந்நிலையில், இச்சம்பவங்கள் தொடர்பாக, ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் தேசியக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கூடிய காலிஸ்தான் அமைப்பினர் இந்தியர்களை தாக்கினர்.
இந்தத் தாக்குதலில், சிலர் படுகாயமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் காரணமாக ஒருவரை கைது செய்துள்ளதாக ஆஸ்திரேலிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘புது வரலாறே..’ – இந்திய மகளிர் கிரிக்கெட் அணி செய்த சாதனை!