பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார்.
சென்னையில் கடந்த 13 ஆம் தேதி தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்தார். இந்நிலையில், இன்று காலை தமிழக முதல்வர் அவரின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு, பிரியாவின் அண்ணனுக்கு அரசு வேலையும் வீடு வழங்கும் ஆணையினையும் அளித்தார்.
இந்நிலையில், தற்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அவருடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உடன் இருந்தார். இருவரும் பிரியாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டியை பாஜக நடத்த உள்ளதாகவும், பிரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் பத்து பெண்களின் பயிற்சிக்கான செலவை பாஜக ஏற்பதாகவும் கூறினார்.
பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மா.சுப்பிரமணியன் முரண்பட்ட தகவல்கள் தெரிவிப்பதாக கூறிய அண்ணாமலை, முதல்வரின் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் இந்த தவறு நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
அதோடு, நிர்வாக கோளாறு காரணமாக ஒரு உயிர் பறிபோயிருக்கிறது என்றும், இந்த உயிரிழப்பு சுகாதாரத்துறை அமைச்சரும், அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்