தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது டெங்கு மற்றும் இன்ஃபுளுயன்சா காய்ச்சலால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்குக்கும் அதிகமான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், சென்னை ஆழ்வாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இரண்டு நாட்களாவது மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘பருவநிலை மாற்றம் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு இன்புளூயன்சா காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.’ என்றார். மேலும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் அடுத்த திருப்பம்! பெற்றோர் மீதே குற்றம்சாட்டிய சிபிசிஐடி..