மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து மதுக்கடைகளையும் கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்பதே அரசின் முடிவு என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.
தமிழகத்தில் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் உள்பட பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இது குறித்து கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் அருகே அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்றும் பணி துறை ரீதியாக எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் முதல்கட்டமாக, சென்னையில் பணி தொடங்கியுள்ளது. குறிப்பாக, வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் உள்பட மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து மதுக்கடைகளையும் கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்பது அரசின் முடிவு.
மாணவர்களுக்கு கையடக்க கணினி கொடுப்பதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த நிலையில், மாணவர்கள் அதனை பயன்படுத்துவதில் சேதாரம் ஆகும் என்பதால், மீண்டும் மடிக்கணினியாயே வழங்க திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆட்சியில் ஒன்றரை லட்சம் மடிக்கணினி வழங்காமல் விட்டுச் சென்றுள்ளனர். அவற்றையும் சேர்த்து கொடுக்கும் நடவடிக்கையில் உள்ளோம்.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பில் இருந்து 5 ஆம் வகுப்பு வரை புதிதாக 5 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இவ்வாறாக அன்பில் மகேஷ் தெரிவித்தார்.