காங்கிரஸ் கட்சியில் இணைபவர்கள் மது அருந்தக்கூடாது என்ற காங்கிரஸ் கட்சியின் விதிமுறையை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் சேரும் புதுமுகங்கள் மது அருந்த மாட்டோம் என உறுதி அளிப்பது கட்டாயமாக இருந்து வந்தது. இந்நிலையில் அந்த விதிமுறையில் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி மது பழக்கம் உள்ளவர்களும் காங்கிரஸ் கட்சியில் சேர முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், மது அருந்தக் கூடாது என்ற விதிமுறை இருப்பதில் அர்த்தமில்லை என கட்சி உறுப்பினர்கள் கருதியதாகவும், அதனை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் காதி உடை அணிவது கட்டாயமாக இருந்த வந்த நிலையில், இதிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் இனி அவர்களின் விருப்பத்தின் பேரில் காதி உடைகளை அணியலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போது ராகுல் காந்தி காதி உடை அணியாததை கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியதாகவும், காங்கிரஸ் கட்சியினர் காதி உடை அணியும் வழக்கம் குறைந்துவிட்டதாகக் கூறியதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளில் இந்த இரு திருத்தங்கள் குறித்த அறிவிப்பை பொதுச்செயலர் ரன்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக – திமுக இடையே கடும் வாக்குவாதம்…