அதிமுகவின் 51-வது ஆண்டு தொடக்க விழாவின் போது ஓ.பன்னீர் செல்வம் சமாதான புறாவை பறக்கவிட்டார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து தற்போது இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக தனது 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தத் தொடக்கவிழாவை முன்னிட்டு, அதிமுகவின் தொண்டர்கள் தற்போது உற்சாகத்தில் இருக்கின்றனர்.
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முழுவதும் கோலாகலமாக காணப்படுகிறது.
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51-ம் ஆண்டு தொடக்க விழாவினை கொண்டாடும் வகையில், தலைமை கழகத்திற்கு சென்றார்.
அதேபோல், சென்னை தியாகராயர் நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்கு வருகை தந்த ஓ.பன்னீர் செல்வம், எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்தி அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்தார். இவரின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அந்தசமயத்தில், கூண்டில் அடைத்து வைத்திருந்த புறாவை வெளியே எடுத்து தொண்டர்கள் ஓ.பன்னேர்செல்வத்திடம் கொடுத்தனர். பின்னர் ஓ.பன்னீர் செல்வம் அந்தப் புறாவை பறக்கவிட்டார்.
ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுக இரண்டு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் 51-வது தொடக்க விழாவின்போது சமாதான புறாவை ஓ.பன்னீர் செல்வம் பறக்கவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இபிஎஸ் வெளியே, ஓபிஎஸ் உள்ளே…. நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட சட்டப்பேரவை