கடந்த சில நாட்களாக அதிமுகவில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே, கட்சித் தலைமைக்கான போட்டி நடந்து வருகிறது. இதில் இருதரப்பினரும் மோதலில் ஈடுபட ஒருவர் பலத்த காயம் அடைந்தார். அதிமுகவில் ஒற்றைத் தலைமையா அல்லது இரட்டைத் தலைமையா என்ற கேள்விக்கு இன்னமும் நமக்கு பதில் கிட்டவில்லை. இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் ஒற்றைத் தலைமையை மட்டுமே விரும்புகிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இது, ஓபிஎஸ் தரப்பினரை எரிச்சலூட்டச் செய்தது.
அதிமுகவில் நீடித்து வரும் இப்பிரச்சனைக்கு இடையே, வருகின்ற ஜூன் மாதம் 23 ஆம் தேதி, தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதினார். ஆனால், இபிஎஸ் இதனை ஏற்பதாக இல்லை. பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டும் என ஓபிஎஸ் கூற, இடப்பற்றாக்குறையை காரணம் காட்டி அதற்கும் மறுப்பு தெரிவித்துள்ளார் இபிஎஸ்.
ஜெயலலிதா காலகட்டத்தில் நடந்த பொதுக்குழு கூட்டங்களில், மூத்த தலைவர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்பது வழக்கம். ஆனால், இம்முறை அது நடக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள், பொதுக்குழு கூட்டத்தில் இடையூறு ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதை அடுத்து, உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நிச்சயம் நடைபெறும். தொண்டர்களும் ஒற்றைத் தலைமையை விரும்புவதால், அதுகுறித்து முடிவெடுக்கப்படும். அதிலும், எடப்பாடி பழனிச்சாமி தான் தலைவராக வருவார் என முன்னாள் அமைச்சர்கள் பலரும் கூறுகின்றனர். இதனை 90% பேர் ஏற்றுக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிச்சாமியின் கீழ் அதிமுக தலைமை சென்றால், ஓ. பன்னீர்செல்வத்திற்கு எந்த வித மதிப்பும் இல்லாமல் போய் விடும் என ஓபிஎஸ் தரப்பு சொல்கின்றனர். இரு தரப்பினரும் ஒற்றைத் தலைமையின் கீழ் தான் தான் வர வேண்டும் என நினைக்கின்றனர். ஏனெனில், தலைமை யாருக்கு கிடைக்கிறதோ அவருக்கு தான், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகும் வாய்ப்பு பிரகாசமாகும்.
இதனால், இரு தரப்பும் விடாப்பிடியாக உள்ளனர். இந்நிலையில், ஓபிஎஸ் எழுதிய கடிதத்திற்கு மதிப்பு கொடுக்காமல், இந்தப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றால், என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. கட்சி இரண்டாக உடையவும், இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்தும் வர நேரிடலாம்.
திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23 ஆம் தேதி நடைபெறுமா இல்லையா? அப்படி நடைபெற்றால் பிரச்சினைகள் எந்த அளவிற்கு ஏற்படும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
நாடு முழுவதும் வலுக்கும் போராட்டங்கள்; பிரதமர் மோடி இன்று ஆலோசனை!