திமுக அரசு திறமையற்ற அரசாக இருக்கிறது என்றும், அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார். கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் எடப்பாடியுடன் இருந்தனர்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக ஆளுநரிடம் கூறியதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கோவை குண்டு வெடிப்பு நடந்திருந்தால், பாதிப்பும் உயிர் இழப்பும் அதிகமாயிருக்கும் என்றும், இதுகுறித்து உளவுத்துறைக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருக்கும் என்றும், இதனை தடுத்திருக்கலாம் என்றும் திமுக அரசு ஒரு திறமையற்ற அரசு என்றும் கூறினார்.
அதேபோல், கள்ளக்குறிச்சி கனியாமூர் சம்பவத்திலும் முன்கூட்டியே விசாரணை நடைபெற்றிருந்தால் வன்முறையும் கலவரமும் தடுக்கப்பட்டிருக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. அண்டை மாநிலங்களிலிருந்து போதைப் பொருள் கடத்தல் சாதாரணமாக இங்கு நடக்கிறது. அனைத்துத் துறைகளில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. திமுக அரசு என்றாலே கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் தான் என அழுத்த திருத்தமாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மேலும் திமுக ஆட்சியில் தற்போது மருந்து தட்டுப்பாடு என்பதை அமைச்சரே ஒத்துக்கொண்டுள்ளார். மருந்து கொள்முதலில் ஊழல் நடந்து வருகிறது. காலாவதியான மருந்தும் பயன்பாட்டில் இருக்கிறது. இன்று உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை திமுக அரசு பறித்துவிட்டது.
‘நம்ம ஊரு சூப்பரு’ விளம்பர பேனரில் மெகா ஊழல் நடந்து இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. 350 ரூபாய் மதிப்புள்ள ஒரு பேனருக்கு ரூ. 7,906 செலவு செய்வதாக கணக்கு காட்டியுள்ளனர். பணி செய்வதற்கு முன்னரே, திமுக அரசு நிதி வழங்கி விடுகிறது. இதுவே திமுக ஊழலுக்கு உதாரணம், டெண்டர் இல்லாமல் பார் நடத்துதல், 24 மணி நேரமும் மது விற்பனை என டாஸ்மாக்கிலும் மெகா முறைகேடு நடந்து வருகிறது. இதுகுறித்தும் ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.