இயக்குநரும் நடிகருமான சசிகுமார் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரைப்படம் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சசிகுமார், சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமானார். அதன்பிறகு, 2010-ஆம் ஆண்டு ஈசன் என்ற திரைப்படத்தை இயக்கினார். சசிகுமார் இயக்கிய இரு திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப் பெற்றன.
வெற்றித் திரைப்படங்களை இயக்கினாலும், ஈசனுக்குப் பிறகு சசிகுமார் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். நடிகராக நல்ல பெயரையும், பல ஹிட் திரைப்படங்களையும் சசிகுமார் கொடுத்துள்ளார்.
தற்போது, சசிகுமார் நடிப்பில் பகைவனுக்கு அருள்வாய், காரி போன்ற படங்கள் தயாராகி வருகின்றன. மேலும், அவர் நடிப்பில் உருவான ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், சசிகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், என் நடிப்பில் உருவான ‘நான் மிருகமாய் மாற’, ‘காரி’ உள்ளிட்ட படங்கள் ஒருவார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. ஒரு இடைவெளியுடன் வெளியாகியிருக்காலம்தான்…. ஆனால், தயாரிப்பாளர்களுக்குள் ஏற்பட்ட ஈகோ காரணமாக இரண்டுமே தற்போது வெளியாகிறது. இரண்டுமே வெற்றி பெற வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
மேலும், திரைப்படம் இயக்குவது குறித்து கேள்வி எழுப்பிய போது, ‘நீண்ட காலங்களுக்குப் பின் நான் மீண்டும் புதிய படத்தை இயக்க உள்ளேன். இதில், நான் நடிக்கவில்லை. வேறு பிரபலங்கள் நடிக்கிறார்கள்’ என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: துபாய் மக்களால் ஒட்டகத்தின் ராணி என்று அழைக்கப்படும் பெண்மணி… கௌரவித்த அரசு