இந்தியா-பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் நேற்று இரவு (ஜூலை 17) எதிர்பாராத விதமாக வெடித்த கையெறி குண்டினால் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர் பூன்ச் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு (Line of Control) பகுதியில், நேற்று இரவு இந்திய ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கையெறி குண்டு ஒன்று வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பேசிய ஜம்மு காஷ்மீர் மக்கள் தொடர்பு அதிகாரி, ‘நேற்று இரவு பூன்ச் பகுதியில், ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கையெறி குண்டு ஒன்று வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் சிக்கிய ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தில், ராணுவ அதிகாரி ஒருவரும், ஜூனியர் கமிஷன் அதிகாரி ஒருவரும் உயிரிழந்தனர்.’ என்று கூறியுள்ளார்.
இந்த வெடி விபத்தில் காயமடைந்த ராணுவ வீரர்கள் அனைவரும், உடனடியாக உதம்பூர் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டரின் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கேப்டன் ஆனந்த் மற்றும் பகவான் சிங் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த விபத்து பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
பந்தேல்கண்ட்: விரைவுச் சாலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி