திருமணமாகாத பெண் 24 வார கருவைக் கலைக்க தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்த மறுப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தில்லியில் வசித்து வரும் மணிப்பூரைச் சேர்ந்த திருமணம் ஆகாத 25 வயதுமிக்க பெண் கருவுற்றார். இந்நிலையில் அந்தப் பெண் தன் கருவை கலைக்க அனுமதி அளிக்குமாறு தில்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவின் மீதான விசாரணையில், “குழந்தையைக் கொல்ல நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம் என்றும், 23 வாரங்கள் முடிந்துவிட்டன. சாதாரண பிரசவத்துக்கு குழந்தை எத்தனை வாரங்கள் வயிற்றில் இருக்கும்? இன்னும் எத்தனை வாரங்கள் உள்ளன? குழந்தையை தத்தெடுக்கும் ஒருவரிடம் கொடுங்கள். ஏன் குழந்தையைக் கொல்கிறீர்கள்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து, கருவைக் கலைக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில், தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தனது கருவைக் கலைக்க கோரி மணிப்பூரைச் சேர்ந்த பெண் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த ஜூலை 21-ம் தேதி நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கருக்கலைப்புக்கான மருத்துவ விதிகளை தில்லி நீதிமன்றம் தேவையற்ற கட்டுப்பாடுகளுடன் பார்வையிட்டது என தெரிவித்தது. மேலும், தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்து உத்தரவிட்டது.
மேலும், இது குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது:
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனரின் கீழ் மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
இதைத்தொடர்ந்து, புதிதாக அமைக்கப்பட்ட அந்த மருத்துவ குழுவுக்கு உள்பட்டு பெண்ணின் உயிருக்கு ஆபத்து இல்லாமல், கருவைக் கலைக்க முடியும் என மருத்துவ குழு சான்றளித்தால் 24 வார கருவைக் கலைக்க பெண்ணை அனுமதிக்கலாம்.
மேலும், ஒரு விதவை அல்லது விவாகரத்து பெற்ற பெண் 20-24 வாரங்களுக்குள் கருவைக் கலைக்க அனுமதிக்கப்படுவார்கள். அதேவேளையில், திருமணமாகாத பெண் என்ற காரணத்துக்காக மனுதாரருக்கு சலுகை மறுக்கப்படக் கூடாது.
இவ்வாறு, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் பசியால் சாகும் அவலம்- உச்சநீதிமன்றம்