கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு வந்த இண்டிகோ விமானத்தின் கழிவறையில் சிகரெட் பிடித்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் இருந்து பெங்களூருவுக்கு 6இ 716 என்ற இண்டிகோ விமானம் ஒன்று வந்தது. விமானம் பறந்த 30 நிமிடங்களில், விமான கழிவறையை ஊழியர் சோதனை செய்துள்ளார்.
அப்போது கழிவறையில் உள்ள குப்பை தொட்டியில் சிகரெட் துண்டு ஒன்று எரிந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக தண்ணீர் ஊற்றி அதனை ஊழியர் அணைத்து உள்ளார்.
கொல்கத்தாவின் சீல்டா பகுதியைச் சேர்ந்த பிரியங்கா சக்ரவர்த்தி என்ற 24 வயது இளம்பெண் விமான கழிவறையில் எரிந்த நிலையிலான மீதமுள்ள சிகரெட் துண்டை வீசியதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, பெங்களூரு கெம்பகௌடா சர்வதேச விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் தரையிறங்கியதும் பிரியங்கா காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, பிற பயணிகள் உள்ளிட்டோரின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்து இருப்பதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டபிள்யுபிஎல்; பெங்களூர் அணியை வீழ்த்திய குஜராத்