எப்போதுமே காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் இடையே கருத்து மோதல்கள் இருந்து கொண்டுதான் இருக்கும். இது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். ஆனால், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே இந்த கருத்து மோதல்கள் சற்று அதிகமாக காணப்படும். சில சமயங்களில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக மாறிவிடும் அளவிற்கு இவர்களின் கருத்து மோதல்கள் இருக்கும்.
பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில், வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் சட்டவிரோத கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகள் புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்படுகிறது. இதனை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிஷ் திவாரி விமர்சனம் செய்துள்ளார்.
இவர் தனது டிவிட்டரில், நாஜிக்கள் யூதர்களுக்கு எதிராக புல்டோசரை அதிக அளவில் பயன்படுத்தினார்கள். யூதர்கள் அதை பாலஸ்தீனியர்களுக்கு எதிராக பயன்படுத்தினர். இந்திய அரசு இப்போது அதை தனது சொந்த சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்துகிறது என பதிவு செய்து இருந்தார்.
மணிஷ் திவாரியின் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க.வின் ஐ.டி.பிரிவு தலைவர் அமித் மால்வியா பதிலடி கொடுத்துள்ளார்.
அமித் மால்வியா டிவிட்டரில், காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரும், மணிஷ் திவாரி முதல் ராகுல் காந்தி வரை, மறதி நோயால் பாதிக்கபடுகிறார்களா அல்லது அவர்கள் தங்கள் கட்சியின் கடந்த காலத்தை பற்றி சரியாக தெரியாதவர்களா? நாஜிக்கள் மற்றும் யூதர்களை மறந்து விடுங்கள், இந்தியாவில் துர்க்மேன் கேட்டில் சிறுபான்மையினர் மீது புல்டோசர்களை பயன்படுத்த முதலில் உத்தரவிட்டவர் இந்திரா காந்தி.
1976 ஏப்ரலில் அவசரநிலையின் போது, முஸ்லிம் ஆண்களையும், பெண்களையும் கட்டாய கருத்தடை செய்ய சஞ்சய் காந்தி வற்புறுத்தினார். மேலும், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, துர்க்மேன் கேட்டில் புல்டோசர்கள் உருட்டப்பட்டன. 20 பேர் இறந்தனர். நாஜிகளுடனான காங்கிரஸின் காதல் இந்திரா காந்தியிடம் நிறுத்தப்பட வேண்டும் என பதிவு செய்து இருந்தார்.
இதன் மூலம் இந்திரா காந்தி தான் முதலில் சிறுபான்மையினருக்கு எதிராக புல்டோசரை பயன்படுத்தினார் என பா.ஜ.க.வின் அமித் மால்வியா காங்கிரஸூக்கு பதிலடி கொடுத்து உள்ளார்.
பற்றி எறிந்த ராஜபக்சேவின் வீடு, பதற்றத்தின் உச்சத்தில் இலங்கை!