இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொள்ள இருக்கின்றன.
சமீபத்தில் மிட்செல் மார்ஷ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் உதவி ஊழியர்களின் நான்கு உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக சோதனையில் தெரிய வந்தது. அதே சமயம், செவ்வாய்கிழமை காலை நடத்தப்பட்ட நான்காவது சுற்று ஆர்டி-பிசிஆர் சோதனைகள் கொரோனா தொற்று இல்லை என்கிற முடிவுகளை அளித்தன. இதனால் எதிர்ப்பார்த்தபடி இன்றைய போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் புனேவில் நடைபெறவிருந்த இந்த போட்டி தற்போது மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று டெல்லி அணியில் மட்டும் அல்லாமல் ஐபிஎல் போட்டியிலும் சில தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாடுகளை மேலும் வலுவாக்கியுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், டெல்லி அணியின் வீரர்களை, கொரோனா தொற்று தொடர்பான சோதனைகள் மனதளவில் பாதித்திருக்கும் என்றே பார்க்கப்படுகிறது.
எப்படியாக இருப்பினும் இன்றைய ஆட்டம் டெல்லி அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுவரையில் ஐந்து ஆட்டங்களில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே கொண்டிருக்கிறது, டெல்லி அணி!
கடந்த போட்டியில் கூட பெங்களூர் அணிக்கு எதிராக 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி தோல்வியடைந்தது. டேவிட் வார்னர் மற்றும் பிருத்வி ஷா ஆகியோர் நல்ல தொடக்கங்களை வழங்கினர், ஆனால் நடுத்தர வரிசை பேட்ஸ்மேன்கள் அதை தக்கவைக்க தவறிவிட்டனர். மேலும், மிட்செல் மார்ஷ் இல்லாதது டெல்லி அணிக்கு இழப்பாகவே பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் அணி பவர்பிளேயில் மிகவும் ஆக்ரோஷமான அணி என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் நடுத்தர வரிசையில் பஞ்சாப் அவ்வபோது சொதப்பி வருகின்றன. ஆனால் இன்றைய போட்டியை பொறுத்த வரையில் டெல்லி அணியை விட பஞ்சாப் சிறந்த பந்துவீச்சை கொண்டுள்ளது.
மேலும், இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதியதில் 15 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸூம், 13 போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் வெற்றியை ருசித்துள்ளன.
இன்றைய போட்டியானது, மும்பையில் உள்ள பிரபார்ன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும்.
இதையும் படியுங்கள், தனி ஆளாய் போராடிய டூ பிளெசிஸ்; கோலி தந்த ஏமாற்றம்!