டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரியில் நடந்த மதக்கலவரத்தின் தொடர்ச்சியாக, அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் நிகழ்வுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
டெல்லியில் கடந்த 16ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தின் போது இருதரப்புக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசியும், கடுமையாக தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் போலீசாரும் கடுமையாக தாக்கப்பட்டனர்.
இது தொடர்பாக டெல்லி கிரைம் பிரிவு போலீசார், இதுவரை 23 பேரை இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய டெல்லி காவல் ஆணையர், குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை தடுக்க 14 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குற்றத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறோம் என்று தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சோனு, தில்ஷாத், அன்சார், சலீம் மற்றும் இமாம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்று கூறப்படுபவர்களின் வீடுகளின் மீது ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி இயந்திரங்கள் மூலம் அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன.
போலீசார் பாதுகாப்புடன் நடந்த இந்த ஆக்கிரமிப்பு சம்பவம் முறைகேடாக நடக்கிறது என்று குற்றசாட்டு எழுந்ததது. டெல்லி மாநகராட்சி நேற்று நோட்டிஸ் வழங்கிவிட்டு இன்று இடிப்பதாகவும், சில இடங்களில் நோட்டிஸ் வழங்காமலேயே இடிப்பதாகவும் குற்றசாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் டெல்லி மாநகராட்சி ஒருதலை பட்சமாக செயல்படுவதாக ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வந்தன. இது தொடர்பாக கபில் சிபல் மற்றும் பிரஷாந்த் பூஷன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடங்கிய அமர்வு, விசாரணை முடியும் வரை எதையும் இடிக்க கூடாது என தற்காலிக தடை விதித்துள்ளது. அதுவரை அங்கு இயல்பான நிலையே தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.