மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஓட்டு வங்கியின் மூலமாக நம் நாட்டின் ஆன்மா மீது நேரடித் தாக்குதலை நடத்துகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட பதிமூன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிராக அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தன. அந்த அறிக்கையில் சமீப காலங்களில் நாட்டில் வெறுப்புணர்வு மற்றும் ஜாதி, மத கலவரங்கள் அதிகரித்து வருவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
இதற்கு பதில் அறிக்கையாகத்தான் ஜே.பி.நட்டா இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் அவர் நாட்டை ஆனாலும் பாஜக அரசின் வெளிப்பாடு நாட்டின் வளர்ச்சியில் தெரிகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு அவற்றின் வார்த்தைகளில் தான் தெரிகிறது. அவர்கள் நாட்டின் ஆன்மா மீது நேரடித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த ஒட்டு வங்கி அரசியல் தந்திரம் எல்லாம் துருப்பிடித்து பலவருடம் ஆகிறது.
நாட்டின் வளர்ச்சி அரசியலுக்கு இதுபோன்ற அரசியல் என்றுமே உதவாது என்பதை மக்கள் தங்களின் தேர்தல் முடிவுகள் மூலமாக காட்டி வருகின்றனர்.
ஆனால், அதை கொஞ்சம் கூட புரிந்துகொள்ளாமல் எதிர்க்கட்சிகள் மக்களை பிரித்தாளும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய இளைஞர்கள் வளர்ச்சியைத்தான் எதிர்பார்க்கின்றனர்.
தடைகள் அவர்களுக்குத் தேவையில்லை. எனவே, எதிர்கட்சிகள் தங்களது பாதையை மாற்றிக்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கான அரசியலில் ஈடுபட வேண்டும். நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதைப் பார்த்தாவது அவர்கள் திருந்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலம் கரவுலியில் மத ஊர்வலத்தின் போது நடந்த மத கலவரத்தைப் பற்றி அக்கட்சி ஏன் மவுனம் காக்கிறது. மதக்கலவரங்கள் எல்லா ஆட்சிகாலங்களிலும் நடக்கின்றன. அதிலும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பலவேறு முறை நடந்துள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மஹாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் மதகலவரங்கள் நடந்துள்ளன.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, நாடாளுமன்றம் முன்பாக பசுவதையை எதிர்த்து போராடிய துறவிகள் மீது 1966ல் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. சீக்கியர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்து விட்டு ராஜிவ் காந்தி பெரிய மரம் விழுந்தால், அதிர்வுகள் ஏற்படத்தான் செய்யும் என்று கூறி இருந்தார் என்று ஜே.பி.நட்டா தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.