கரூர் மாவட்டத்தில் விபத்துகளைக் குறைப்பதற்காக, அம்மாவட்ட ஆட்சியர் திரு. பிரபுசங்கர் அதிர முடிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் விபத்துகள் அதிகம் நடக்கும் மாவட்டமாக, கரூர் மாவட்டம் இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பல்வேறு முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.
ஆலோசனைக் கூட்டம்:
தற்போது மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அவர்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரி ஊழியர்கள், தொழிற்சாலை நிறுவனங்கள், பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் என அம்மாவட்ட முக்கிய அமைப்புகளின் உரிமையாளர்களிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் சாலை விபத்துகள் அதிகம் நிகழும் மாவட்டமாக கரூர் இருப்பதாகவும், நிகழ்ந்த விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் சென்றதால் ஏற்பட்ட விபத்துகள்தான் அதிகம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஆட்சியர் பிரபுசங்கர் தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற வரியின் ஆழமான அர்த்தத்தை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் கரூர் மாவட்டத்தில் சாலை விபத்துகள் அதிகம் நடப்பது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
நடைமுறை எப்போது?
ஆட்சியர் பிரபுசங்கர் கூறிய அறிவிப்பில் வருகின்ற 18 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பெட்ரோல் பங்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்தவருக்கு மட்டும் தான் சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். தலைக்கவசம் அணிந்து வரமால் வருபவர் எவருக்கும் சேவைகள் வழங்கபடாது என்றும் தெரிவித்தார்.
எந்த இடங்களில்?
இதுகுறித்து அனைத்து பொது இடங்களிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். மக்களுக்கு இந்த அறிவிப்பு குறித்த விழிப்புணர்வு செய்யப்படும். பெட்ரோல் பங்குகளில் தலைக்கவசம் அணியாமல் செல்பவருக்கு பெட்ரோல் கிடையாது. அரசு நடத்தும் மதுபான கடைகளில் தலைக்கவசம் அணியாமல் செல்பவருக்கு மதுபானம் கிடையாது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வந்தால் பணிக்கு அனுமதிக்கப்படமாட்டர்.
கரூர் மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் இப்போது வரை தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.