கடந்த மார்ச் 18 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது அதற்கு அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பி டிஆர் பழனிவேல் தியாகராஜனும், வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வமும் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தனர். கடந்த ஆண்டைப் போலவே காகிதமில்லா முறையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல முக்கிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து மார்ச் 21,22 மற்றும் 23 தேதிகளில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நடத்தப்பட்டன. இதில் அனைத்துக் கட்சிகளின் பல்வேறு கேள்விக்கான பதில்களை அமைச்சர்கள் தெரிவித்தனர். மேலும் நிதியமைச்சர், வேளாண் அமைச்சர்களின் பதிலுரைகளுடன் மார்ச் 24 ஆம் தேதி அதாவது நேற்று சட்டப்பேரவை நிறைவுற்றது. இதையடுத்து பேரவை தேதி நேரம் காலம் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் மானிய கோரிக்கைக்கான சட்டசபை கூட்டத் தொடர் குறித்த அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். “வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி மானியக் கோரிக்கைக்கான விவாதம் நடைபெறும் எனவும் வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி துறை வாரியாக மானியக் கோரிக்கைகளை எப்போது கேட்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும் அதிமுக வெளிநடப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “ எதிர்க்கட்சி தலைவர் பேசும் போது என்னை பேச விடுங்கள், அடுத்தநாள் நிதி அமைச்சர் பதில் சொல்லுங்கள், அந்த அடிப்படையில் தான் ஒன்றரை மணி நேரம் பேசினார். அமைச்சரவை என்பது ஒரு கூட்டு பொறுப்பு. நிதியமைச்சர் அவசர வேலையின் காரணமாகதான் என் கவனத்திற்கு சொல்லிவிட்டு சென்றார். அவர் யாரையும் அவமதிப்பு செய்யவில்லை. முதலமைச்சரே அவையில் இருக்கும்போது அதிமுக அவ்வாறு குறைக் கூறி வெளிநடப்பு செய்திருக்க வேண்டாம்” என்றும் கூறினார்.
“மானியக் கோரிக்கைக்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி மீண்டும் பேரவை மண்டபத்தில் நடைபெறும்” என்றும் தெரிவித்தார். இந்த மானியக் கோரிக்கைக்கான கூட்டத் தொடர் அறிவிப்பு மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.