தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தமிழுக்கு முதலிடம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கிடைத்த தகவல் ஒன்று பல கேள்விகளை பொது மக்களிடத்தில் எழுப்பியுள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வரும் பள்ளிகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. அக்கேள்விக்கு பதிலாக தமிழகத்தில் 54 அரசு உயர்கல்வி மற்றும் மேல்நிலைக்கல்வி நிலையங்களில் ஆங்கில மொழி மட்டுமே பயிற்று மொழியாக இருப்பது தெரியவந்துள்ளது. இத்தகவல் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை மழுப்பாமல் சரிவர பதிலளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் தங்களின் குழந்தைகள் ஆங்கில கல்வி பயில்வதை தாங்கள் விரும்புவதாக சில மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் சிலர் ஆங்கில பயிற்று மொழியை ஒப்புக்கொண்டதாகவே இருக்கட்டும் ஆனால் அதை ஏன் அதிகாரப்பூர்வமாக தமிழகத்தை ஆளும் அரசு சொல்ல தயங்குகிறது என்ற கேள்வியை முன் வைத்து வருகின்றனர்.
திமுக தங்களின் மொழிப்பற்று குறித்து அனைத்து மேடைகளிலும் பெருமையாக பேசி வரும் நிலையில், இப்படியான தகவல்கள் வெளிவந்து தற்போதைய திமுகவின் மொழிப்பற்றையும், கொள்கைகளையும் கலங்கடிக்கிறது என்று திமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனால் விரைவில் பள்ளிக் கல்வித்துறை ஆங்கில பயிற்று மொழி பள்ளிகள் குறித்து சரியான பதிலை அளிக்கும் என்று பலராலும் எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது.
வெளிவந்துள்ள தகவல்களின் படி, சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி, சிவகங்கை, கடலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஆங்கில மொழி மட்டுமே பயிற்று மொழியாக கற்பிக்கப்படும் பள்ளிகள் அதிக அளவில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.