எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர்களின் முக்கியமான நடிகராக விளங்கி வருபவர் நடிகர் அஜித்குமார். இவரின் தந்தை பி.சுப்ரமணியம். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாகவே பக்கவாதம் மற்றும் வயது மூப்பின் காரணமாக ஏற்படும் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த பி.சுப்ரமணியம் இன்று காலை தனது 84-ஆவது வயதில் காலமானார். இது குறித்த தகவல் வெளியானதை அடுத்து சினிமா பிரபலங்களும், அஜித் ரசிகர்களும் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியத்தின் உடல் காலை 10 மணிக்கு மேல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் தகனம் செய்யப்படும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்,தந்தையை இழந்து வாடும் திரு.அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.’ என தெரிவித்துள்ளார்.