சத்தீஸ்கர் மாநிலத்தில் செங்கல் சூளை புகையை சுவாசித்த 5 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், மஹசாமுண்ட் மாவட்டம், காந்த்புல்ஹர் கிராமத்தில் செங்கல் சூளை ஒன்று உள்ளது. இந்தச் செங்கல் சூளையில் நேற்று இரவு செங்கலை சுட தொழிலாளர்கள் தீ வைத்தனர்.
இதனிடையே தொழிலாளர்கள் 6 பேர், செங்கல் சூளையில் தீ வைக்கப்பட்ட சுடு செங்கல் மேடை மீது நேற்று இரவு படுத்து உறங்கியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, இன்று காலை பிற தொழிலாளர்கள் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அங்கு சக ஊழியர்கள் 6 பேர் படுத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்களை எழுப்ப முற்பட்டனர்.
அப்போது அதில், 5 பேர் உயிரிழந்த நிலையிலும், ஒரே ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் இருந்துள்ளார். இதையடுத்து, உடனடியாக அந்த நபரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, உயிரிழந்த 5 பேரின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் முதற்கட்ட விசாரணையில், செங்கல் சூளையில் செங்கல்களை சூடுபடுத்த தீ வைக்கப்பட்டது என்றும், அதன் மேல் அடுக்கில் படுத்து உறங்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்ட் தொடரில் மாஸ் செய்த இந்திய அணி…