கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஶ்ரீமதி கடந்த ஆண்டு ஜூலை 13-ம் தேதி பள்ளி விடுதி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்தார்.
இதைத்தொடர்ந்து, ஶ்ரீமதி மரணத்தில் நியாயமான விசாரணை வேண்டுமென மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.
அப்போது, சிபிசிஐடி தரப்பில் மாணவியின் மரண வழக்கு விசாரணை தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி, மாணவியின் மரண வழக்கில் விசாரணை நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாணவியின் கைப்பேசி தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், ஆய்வுக்கான முடிவிற்காக தற்போது காத்திருக்கிறோம். இன்னும் 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படுமென்றும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
‘பணத்தை எடுக்க வரவில்லை… நான் உங்கள் விருந்தாளி’ – கடிதம் எழுதிய திருடன்!