நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி வணிக நோக்கத்துடன் பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது வழக்கறிஞர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், சிவ்ராஜ்குமார், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த நடிக்கவுள்ளார். இதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் இளம்பாரதியின் சார்பில் பொது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம் மற்றும் குரலை அவரது அனுமதியின்றி பயன்படுத்தி வருகிறார்கள். இது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதனால், நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி வணிக நோக்கத்துடன் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி உரிமையியல், குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி; விமர்சனங்களுக்கு உள்ளாகும் இந்திய அணி!