வட மாநிலங்களில் அடர் பனிமூட்டம் நிலவுவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே மிகக் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த அடர் பனிமூட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாலை போக்குவரத்தும், விமான போக்குவரத்தும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மற்றும் கிழக்கு மாநில பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் நிலவி வருகிறது.
தில்லி உள்ளிட்ட வட இந்தியாவின் சில பகுதிகளுக்கு நேற்று பனிமூட்டத்திற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் அடர்ந்த மூடுபனி, குளிர் நாள் மற்றும் குளிர் அலை போன்ற நிலைமைகள் தொடரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதே சமயம் இன்னும் ஓரிரு நாட்களில் சிறிது நிவாரணம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று தில்லியில் குளிர் அலை இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்ஸியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்ஸியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளை பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையும், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
‘குப்புற படுத்தால் மார்பக புற்றுநோயா?’ – சித்த மருத்துவருக்கு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ்