உத்தரகாண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி 46 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளரான புஷ்கர் சிங் தாமி அதிர்ச்சிகரமாக காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர காப்ரியிடம் தோல்வியைத் தழுவினார்.
பஞ்சாப், உத்தரபிரதேசம் ,உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்ற உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகளாக அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாஜக அரசு 46 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும் முன்னிலை வைக்கிறது. ஆம் ஆத்மி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 70 தொகுதிகளைக் கொண்டுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் 82.4 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் காங்கிரசுக்கு 36.5 சதவீதம் வாக்குகளும், பாஜகவுக்கு 46.5 சதவீதம் வாக்குகளும் கிடைத்துள்ளன. ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் செயல்பட்ட காங்கிரஸ் கட்சி இந்த முறை 10 இடங்களில் அதிகம் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், பாஜகவின் முதல்வர் வேட்பாளர் புஷ்கர் சிங் தாமி காதிமா தொகுதியில் காங்கிரசின் புவன் சந்திர காப்ரியிடம் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதே நேரத்தில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளருமான ஹரிஷ் ராவத்தும் தோல்வி அடைந்துள்ளார்.
கோவா, மணிப்பூர், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் ஆட்சியைப் பிடித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் உத்தரகாண்ட் முதல்வர் வேட்பாளர் புஷ்கர் சிங்க் தாமி தோல்வியைச் சந்தித்துள்ளது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதாவின் சார்பாக யார் முதல்வராக பொறுப்பேற்க போகிறார்? என்ற கேள்வி அம்மாநில மக்களிடையே எழுந்துள்ளது.