அரசியல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு மிகப்பெரும் ஆளுமை மிக்க தலைவியாக, மிகச்சிறந்த தலைமையாக, யாரும் பக்கத்தில் நெருங்க முடியாத கர்ஜனை மிக்க சிங்க பெண்ணாக வளம் வந்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர்தான் ‘ஜெ. ஜெயலலிதா என்னும் நான்’ என்ற மந்திரச்சொல்ளுக்கு சொந்தக்காரனான செல்வி ஜெயலலிதா அவர்கள்.
‘மக்களால் நான்… மக்களுக்காகவே நான்’ என்று சொல்லால் மட்டுமல்ல அந்த வார்த்தையை அப்படியே பின்பற்றி தனது வாழ்க்கையால் வாழ்ந்து, சவால்களை சாதனைகளாக்கி சாதிக்க துடிக்கும் பல பெண்களுக்கு, பெண் சமூகத்தத்துக்கு ஒரு சிறந்த ரோல் மாடலாக, பார் போற்றும் இரும்பு பெண்மணியாக நம்மோடு வாழ்ந்து, பிரியாவிடை கொடுத்து சென்ற செல்வி ஜெயலலிதா அவர்கள் மறைந்து இன்றுடன் 6 ஆண்டுகள் கடந்துவிட்டன.
திரைப்பட நடிகை, அ.தி.மு.க. என்ற மிகப்பெரும் கட்சியின் பொதுச்செயலாளர், தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதலமைச்சர் என ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்த ஜெயலலிதா அவர்கள் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மெலுக்கோட் என்ற இடத்தில் 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி, திருச்சி ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட வேதவள்ளிக்கும், கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஜெயராமன் என்பவருக்கும் பிறந்த செல்ல மகள் ஆவார். இவரின் இயற்பெயர் கோமளவல்லி.
ஜெயலலிதா தன் குழந்தை பருவத்தில் இருந்தே நிறைந்த அறிவுமிக்கவராகவும், பரதநாட்டியம், கல்வி கர்நாடக இசை என பன்முகத் திறமை வாய்ந்தவராகவே திகழ்ந்து வந்தவராவார். ஜெயலலிதாவிற்கு ஒரு வயது இருக்கும் போதே, அவரது தந்தை ஜெயராமன் மறைந்து போனார். இதனால் ஜெயலலிதா அவர்களின் தாய் சந்தியா தனது குழந்தைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தார்.
இங்கு தனது தங்கை வித்யாவதியின் உதவியுடன் சினிமாவில் சேர்ந்து கதாநாயகி, குணச்சித்திரம், துணை வேடங்கள் என்று அனைத்திலும் மிகச்சிறந்த நடிகையாக தன்னை மெருகேற்றிக்கொண்டு நடித்தார். தாய் சந்தியா மிகவும் பிஸியான ஒரு நடிகையாக சினிமாவில் வளம் வந்ததால், தனது பிள்ளைகள் இருவரையும் அருகில் இருந்து பார்த்துக்கொள்ள முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால் ஜெயலலிதா பெங்களுரில் உள்ள தனது பாட்டி மற்றும் பெரியம்மா ஆகியோரின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார்.
இப்படி 6 வயது முதல் தனது 10 வயது வரை பெங்களுரில் உள்ள தாத்தா பாட்டி வீட்டில் வளர்ந்த ஜெயலலிதா, அங்கு பிஷப் காட்டன்ஸ் பள்ளியில் சேர்ந்து படித்துள்ளார். படிப்பில் படு கெட்டிக்காரரான ஜெயலலிதா பள்ளியில் ஆங்கிலத்திலும் வரலாற்றுப் பாடத்திலும் முதல் மாணவியாக இருந்தாராம்.
ஜெயலலிதாவின் அம்மா சந்தியா பொருளாதார ரீதியாக கொஞ்சம் முன்னேறியதும், தி.நகர் சிவஞானம் தெருவில் சொந்தமாக வீடு வாங்கி தன் பிள்ளைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு வந்து சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் சேர்த்துவிட்டார். 1963-ம் ஆண்டு மெட்ரிகுலேஷன் பள்ளித்தேர்வில் ஜெயலலிதா மாநிலத்திலேயே முதல் மாணவியாகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கல்லுாரியில் தொடர்ந்து படிக்க மத்திய அரசு ஸ்காலர்ஷிப் வழங்கியது. ஆங்கிலத்தில் மிகப் புலமை பெற்றிருந்த ஜெயலலிதா எதிர்காலத்தில் கல்லுாரியில் ஆங்கில பேராசிரியராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால் காலம் யாரை விட்டு வைத்தது. ஜெயலலிதாவின் வாழ்க்கை திசைமாறி சினிமாத்துறை பக்கமாக வந்தது அவரே எதிர்பார்த்திராத ஒன்று.
ஜெயலலிதாவின் திரைப்பிரவேசசமும், பேராசிரியர் கனவும்;
தாய் சந்தியா, சித்தி வித்யாவதி ஆகிய இருவரும் திரைத்துறையில் இருந்தவர்கள் என்பதனால் 24 மணிநேரமும் சினிமா சம்பந்தமான பேச்சைக் கேட்டு வளர்ந்தவர் ஜெயலலிதா. இதனால் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருக்கிறார். இருந்தாலும் சினிமா மீது பெரிய ஆர்வம் என்பது துளியும் ஜெயலலிதாவிற்கு இருந்ததில்லை.
இருப்பினும் ஒய்.ஜி. பார்த்தசாரதி அவர்களின் நாடகக் குழுவில் மறைந்த துக்ளக் சோவுடன் இணைந்து பல ஆங்கில நாடகங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பையும் ஆங்கிலப் புலமையையும் கண்டு எபிசில் என்ற ஆங்கிலப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. கர்ணன் படத்தின் நுாறாவது நாள் விழாவிற்கு தாயாருடன் சென்றபோது பிரபல இயக்குநர் பி.ஆர்.பந்துலு ஜெயலலிதாவை தன்னுடைய கன்னடப் படத்தில் நடிக்க கேட்க தாய் சொன்ன ஒற்றை வார்த்தைக்காக விருப்பமில்லாமல் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் ஜெயலலிதா.
இதற்கிடையில் பள்ளிப்படிப்பையும் தொடர்ந்து கொண்டிருந்த ஜெயலலிதா மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் ஆளாக தேர்வாகி மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் பெற்று மேற்படிப்பை தொடரும் அளவிற்கு முன்னேறியிருந்தார்.
அந்த செய்தியை தனது பள்ளித் தோழிகளிடம் பெருமிதமாகக் காட்டிவந்த ஜெயலலிதா நிச்சயம் நமது பேராசிரியர் கனவு நிஜமாகப்போகிறது என்ற ஆனந்தத்தில், இருந்த போதுதான், ஜெயலலிதாவின் பேராசிரியர் கனவைத் தகர்த்தது இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் பிடிவாதம். அந்த பிடிவாதத்தால் வெண்ணிற ஆடையில் நடிக்க ஒப்பந்தமானார் ஜெயலலிதா.
1963-ம் ஆண்டு இறுதியில் வெண்ணிற ஆடை படத்திற்கான கதையை எழுதி முடித்திருந்த ஸ்ரீதர் அவர்கள், அதற்கான கதை மாந்தர்களை தேடிக்கொண்டிருந்துள்ளார். அதுவும் அப்போது இளமையான, துறுதுறுப்புடன் நடிக்கும் நடிகை ஒருவரை செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து தேடிக்கொண்டிருந்த போதுதான் நன்ன கர்த்தவ்யா என்ற கன்னட படத்தின் ரஷ்ஷை பார்க்க நேர்ந்து, அதில் கதாநாயகியாக நடித்திருந்த ஜெயலலிதாவை பார்த்ததும் மிகவும் பிடித்து போய் உடனே சந்தியா அவர்களின் வீட்டின் கதவைத் தட்டியுள்ளார் இயக்குனர் ஸ்ரீதர் .
அந்த நிமிடம்தான் ஜெயலலிதா அவர்களின் பேராசிரியர் கனவு சுக்குநூறாகிப் போனது. தாய் சந்தியாவும் மகள் நடிப்பதற்கு சம்மதம் வழங்க ஸ்ரீதர் அவர்களின் வெண்ணிறாடை படத்திற்குள் கதாநாயகியாக வந்தார் ஜெயலலிதா. முதல் படத்திலேயே விதவை வேடத்தில் மிகவும் துணிச்சலாக நடித்திருந்த ஜெயலலிதாவிற்கு இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து போனது. இதனையடுத்து ஜெயலலிதாவை கன்னடத்தில் அறிமுகம் செய்த அதே இயக்குனர் பி ஆர் பந்துலு தமிழில் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து இயக்கவிருந்த ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு ஜெயலலிதாவை ஒப்பந்தம் செய்தார்.
இப்படம்தான் ஜெயலலிதா அவர்களின் வாழ்கையில் பல மாற்றங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது. பொதுவாகவே ஜெயலலிதா அவர்கள் படிப்பில் ஆர்வம் உள்ளவர் என்பதனால் படப்பிடிப்பில் யாருடனும் அதிகம் அரட்டை அடிக்காது, புறம் பேசாது,கிடைக்கின்ற நேரங்களில் ஒரு ஆங்கில நாவலுடன் ஒதுங்கி அமைதியாக படிக்க ஆரம்பித்துவிடுவாராம். இதை பார்த்த எம் ஜி ஆர் அவர்களுக்கு ஜெயலலிதாவின் மீது மிகப்பெரிய மரியாதையும், மதிப்பும் அதிகமாகி தொடர்ந்து தன் படங்களில் நடிக்கும் வாய்ப்பை வழங்க ஆரம்பித்தாராம். இதனால் குறுகிய காலத்திற்குள்ளாகவே உச்சக்கட்டப் புகழடைந்ததோடு, அதிகப்படங்களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த நடிகை என்ற புகழையும் பெற்றார் ஜெயலலிதா.
இதற்கிடையில் நடனத்தின் மீதும் அதீத ஆர்வம் கொண்ட ஜெயலலிதா அதையும் விட்டுவிடாது தனது பெயரிலேயே நாட்டியக்குழு ஒன்றைத் தொடங்கி நாட்டிய நாடகங்களை அரங்கேற்றிவந்தார். இப்படி நடிப்பு, நடனம் என புகழ் வெளிச்சத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருந்த ஜெயலலிதாவிற்கு மிகப்பெரிய பேரிடியாக வந்து விழுந்தது தான் அம்மா சந்தியாவின் மறைவு.
சந்தியா அவர்கள் மறையும் வரை ஜெயலலிதாவிற்கு எல்லாமுமாக இருந்தவர். அம்மா இல்லாத ஒரு வாழ்வை ஜெயலலிதா அவர்களால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. இதனால் ஒருவித மனச்சோர்வுக்கு அதாவது மன உளைச்சல்களுக்கு ஆளானார் ஜெயலலிதா. தனது சொத்துக்களின் மீது மட்டுமே உறவு கொண்டாடிய சில உறவுகளால் இன்னும் மனச்சோர்வுக்கு ஆளாகி சினிமா உலகிலிருந்தே விலகத் தொடங்கினார் ஜெயலலிதா. அப்போதெல்லாம் அவருக்கு முழுக்கு முழுக்க ஆறுதலாகவும் உறுதுணையாகவும் இருந்தது மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள்தான்.
70-களின் மத்தியில் எல்லாம் திரைத்துறையில் இருந்து முற்றிலுமாக விலகி வனவாசம் செல்வதை போல் ஹைதராபாத்திற்கு சென்று தங்கினார். பிறகு அங்கிருந்து சில வருட இடைவெளியில் மீண்டும் தமிழகம் வந்த ஜெயலலிதா சில திரைப்படங்களில் நடித்தார். இதில் 1980-ஆம் ஆண்டு பி.லெனின் என்பவரது இயக்கத்தில் வெளிவந்த ’நதியைத்தேடி வந்த கடல்’ திரைப்படம் ஜெயலலிதா அவர்களின் திரைவாழ்க்கையின் கடைசி படமாக அமைந்து போனது . பிறகு மீண்டும் நாட்டியக்குழுவில் கவனம் செலுத்தினார்.
நாட்டியக்குழுவில் கவனம் செலுத்திவந்த இந்த நேரத்தில்தான் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மூலமாக மீண்டும் எம்ஜிஆர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. எம்ஜிஆர் அவர்கள் தமிழகத்தின் முலமைச்சராக இருந்த நேரமது. அதனால் எம்ஜிஆர் அவர்கள் ஜெயலலிதா அவர்களை அதிமுக கட்சியில் உறுப்பினராக சேர்த்தது மட்டுமல்லாது, கொள்கைபரப்புச் செயலாளர் பதவி, மாநிலங்களவை உறுப்பினர் என பல பொறுப்புகளையும் கொடுத்து அழகு பார்த்தார். எம்ஜிஆர் அவர்களின் இந்த நடவடிக்கை கட்சியில் மூத்த தலைவர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியது. இருப்பினும் ஜெயலலிதா துணிச்சல் மிக்க பெண்ணாக வெற்றிநடைபோட்டு அரசியல் படிக்கட்டுகளில் முன்னேறிக்கொண்டே சென்றார்.
அவரின் அசுர வளர்ச்சி சுட்டி இருந்தவர்களை ஒருவித பயத்திற்கு உள்ளாக்கியது. தொடர்ந்து முன்னேறிக்கொண்டே வந்தார். இதன் மூலம் எம்ஜிஆர் அவர்களின் அரசியல் வாரிசு ஜெயலலிதாதான் என மற்றவர்கள் பேசும் அளவுக்கு அரசியல் வளர்ச்சியின் உச்சத்தை தொட்டார்.இந்த நேரத்த்தில் எம்ஜிஆர் அவர்களின் உடைநிலை மோசம் அடையவே 1987 ம் ஆண்டு டிசம்பர் 24 ந்தேதி எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி ஜானகி தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வரானார்.
இங்குதான் ஜெயலலிதா அவர்களின் அரசியல் பிரவேசம் பெரிய அளவில் உருவெடுத்தது. ஆம், எம்ஜிஆர் அவர்களின் மறைவில் ஜெயலலிதா தாக்கபட்டதன் விளைவு , ஜானகி அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற 24 நாட்களிலேயே ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் 1989-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை சந்திக்கக்கூடிய சூழல் உருவானது. இதில் ஜெயலலிதா அவர்களின் சேவல் அணி 27 இடங்களில் வெற்றிபெற்று முதன்முறையாக தமிழக சட்டமன்றத்தில் ஒற்றை பெண் சிங்கமாக, எதிர்க்கட்சித் தலைவராக போய் அமர்ந்தார் ஜெயலலிதா.
பல அவமானங்களையும், பழிச்சொற்களையும், ஏச்சுகளையும், சுமந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக தொடர்ந்து ஆறுமுறை அரியணை ஏறிய ஜெயலலிதா அவர்கள் இன்று நம்மோடு இல்லை. ஆனால் அவர் காட்டிவிட்டு சென்ற தைரியம் என்ற ஒற்றை செயல் இன்றும் தமிழ்நாட்டில் பல பெண்களுக்கும் ரோல் மாடலான ஒன்று. அவர் இல்லாவிட்டாலும் அவர் நமக்கு கொடுத்து சென்ற தைரியமும், தன்னம்பிக்கையும் ஏராளம். ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அவர் ஒருவரே சாட்சி.
அவர் மறைந்த இந்த நாளில், அவரை பற்றின நல்ல கருத்துகளை பதிவிட்டு பெருமை படுத்துகிறது தினவாசல் செய்திகள்.