ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியத்தைத் தொடர, ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழ் எனப்படும் ஜீவன் பிரமான் பத்ராவை ஓய்வூதிய விநியோக ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாக, ஆண்டுதோறும் இந்த சான்றிதழ் நவம்பரில் சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்த நவம்பர் மாதம் முழுவதும் ஆயுள் சான்றிதழை மாதம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம். இதை செய்ய தவறினால், அவரது ஓய்வூதியம் நிறுத்தப்படலாம். மேலும், ஆதார் அடிப்படையில் இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இது பயோமெட்ரிக் அங்கீகார முறையால் ஆதரிக்கப்படுகிறது. ஓய்வூதிய விநியோகத்தில் வரும் சிக்கல்களை அகற்ற, இந்திய அரசு முழு செயல்முறையையும் டிஜிட்டல் மூலம் நடைமுறைபடுத்தி உள்ளது. மாநில அரசு, மத்திய அரசு அல்லது பிற அரசு அமைப்புகளிடமிருந்து ஓய்வூதியம் பெறும் நபர்கள் இந்த டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வசதியிலிருந்து பயன் பெறலாம்.
இந்த சான்றிதழை பெற விண்ணப்பிப்பவர்கள்,ஓய்வூதியதாரர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசாங்கத்தின் ஓய்வு பெற்ற ஊழியராக இருக்க வேண்டும். அதோடு, விண்ணப்பதாரர்கள் சரியான ஆதார் அட்டையை வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் அந்தந்த ஓய்வூதிய விநியோக நிறுவனத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
கைபேசி மூலமாக ஜீவன் பிரமான் செயலியை பதிவிறக்குவதன் மூலம் தனி நபர்கள் ஜீவன் பிரமான் சான்றிதழைப் பெற முடியும். இணையம் அல்லாத மாற்று வழியில், தனி நபர்கள் தங்களுக்கு அருகில் இருக்கும் ஜீவன் பிரமான் மையத்திற்கு சென்று அந்த இடத்திலேயே பதிவு செய்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: வீர சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது புகார்…