வீர சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மீது சாவர்க்கர் பேரன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
ராகுல் காந்தி தற்போது மராட்டிய மாநிலத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வாசிம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, வீர சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு அவர்களிடம் ஓய்வூதியம் பெற்றவர் என கூறினார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவினர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இதுகுறித்து பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பாத்ரா, சோனியா காந்தி குடும்பம் மட்டும் தான் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு சிறை சென்றவர்கள் என அக்குடும்பம் நினைத்து கொண்டிருப்பதாகவும், வீர சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதற்கு ராகுல் காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.
இதனிடையே, வீர சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் மும்பை சிவாஜி பார்க் காவல்துறையிடம் ராகுல் காந்தி மீது புகார் கொடுத்துள்ளார்.
அதேபோல், வீர சாவர்க்கரை அவமதித்து பேசியதற்காக, மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலேவுக்கு எதிராகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நேற்றுவரை இந்த புகாரின் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இதையும் படிங்க: ஜனவரியில் இருந்து தொடங்குகிறது சூரிய சத்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம்: அமைச்சர் செந்தில் பாலாஜி