பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகில் கவனம் பெற்ற இயக்குநர், மாரி செல்வராஜ். கர்ணன் திரைப்படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கப்போகும் திரைப்படம் குறித்து திரையுலக மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவ ஆரம்பித்தது. இப்படியான சூழலில் நடிகர் சியான் விக்ரம் அவர்களின் புதல்வன் துருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், துருவ் விக்ரமை வைத்து இயக்குவதா இருந்த திரைப்படம் தள்ளிப்போகும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. பலரும் இத்தகவலில் உண்மையில்லை என்று கூறிவந்தனர். தற்போதோ இத்தகவல் உண்மையென்று தெரிய வந்துள்ளது. தனது அடுத்தப்படம் குறித்து மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் துருவ் விக்ரம் இல்லாததுதான் இத்தகவல் உண்மையென அறிவதற்கு காரணமாய் அமைந்தது.
ஆம்! மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இவர் இயக்கும் புதிய திரைப்படத்திற்கு மாமன்னன் என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பலருக்கும் பிடித்தமான வைகைப்புயல் வடிவேலு அவர்கள் நடிக்க இருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு அவர்களின் நடிப்பும் அவரின் கதாப்பாத்திரமும் எப்படியாக இருக்குமென்று, பலரிடத்திலும் தற்போதே ஆவல் எழுந்துள்ளது.
வடிவேலு மட்டுமல்லாமல், இந்திய அளவில் தன் நடிப்பால் பலரையும் கவர்ந்து வரும் ஃபகத் பாசிலும் மாமன்னன் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், கீரத்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இப்படத்தில் நடிக்க இருக்கின்றனர்.
இதுவரை மாரி செல்வராஜ் இயக்கிய இரு திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர், சந்தோஷ் நாராயணன் ஆனால் இம்முறை சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.