முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று சோனியாகாந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நாட்டின் முதல் பிரதமராக பொறுப்பேற்ற முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 134 பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவரது பிறந்தநாள் குழந்தைகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, தில்லியில் உள்ள நேருவின் நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியாகாந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலர் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, ஜவஹர்லால் நேரு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “அவரது பிறந்தநாளில், நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். நமது நாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவு கூருகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, சென்னை மேயர் ப்ரியா உள்ளிட்டோர் சென்னை கதிப்பாராவில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது திரு உருவ படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரியில் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி கடற்கரையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகின்றது. புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள நேரு சிலைக்கு அரசு சார்பில் வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோன்று புதுச்சேரி வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நேரு உருவப்படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து – துவம்சம் செய்த ஸ்டோக்ஸ்!