நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர்கள் தமிழகம் முழுவதும் மக்களை நேரடியாகச் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை களைய உள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ் அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் ஆலோசனை நடத்தினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் இசக்கி படையாட்சி, அமைப்பு செயலாளர் செல்வக்குமார், தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஜோதிராஜ், சங்கர், பாலசுப்பிரமணியன், சரவணன் திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட செயலாளர்கள் அய்யப்பன், பாலசுப்பிரமணியன், நாகை மாவட்ட செயலாளர் சித்திரைவேல், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் ஆ.பழனிச்சாமி, அரியலூர் மாவட்ட செயலாளர் தனிவீடு ரவி, மாவட்டத் தலைவர் சின்னத்துரை, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்களின் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து மருத்துவர் அய்யா அவர்களிடம் விளக்கியுள்ளார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியை வளர்த்தெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.