முன்னாள் மந்திரியும், கேரள சட்டசபையில் முக்கிய நபருமாக இருந்த ஒருவர் என்னை உல்லாசத்திற்கு ஓட்டலுக்கு வருமாறு பலமுறை அழைத்து உள்ளார் என ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
2020-ம் ஆண்டு ஜூலை மாதம் கேரளா தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனின் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் கேரள அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜாமினில் ஸ்வப்னா சுரேஷ் விடுதலையாகினார். இவர் ‘சதியின் பத்ம வியூகம்’ என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். அந்த சுயசரிதையில் இடம்பெற்றவை தற்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
குறிப்பாக, சுயசரிதையில் பாலியல் சார்ந்து தெரிவித்துள்ளவை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளதாவது:
நான் யாருக்கு எதிராகவும் பாலியல் புகார் கூற விரும்பவில்லை. ஆனால் முன்னாள் மந்திரியும், கேரள சட்டசபையில் முக்கிய நபருமாக இருந்த ஒருவர் என்னை உல்லாசத்திற்கு ஓட்டலுக்கு வருமாறு பலமுறை அழைத்து உள்ளார். ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை. இது தொடர்பாக அவர் எனக்கு பலமுறை அனுப்பிய வாட்ஸ் ஆப் தகவல்கள் இப்போதும் என்னிடம் பத்திரமாக உள்ளன. அதை நான் விசாரணை அதிகாரிகளிடம் ஏற்கனவே கொடுத்துவிட்டேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.