தமிழகத்தில், பல காலமாய் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி வலியுறுத்தல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவ்வபோது போராட்டங்களும் நடைபெற்றுதான் வருகின்றன. ஆனாலும் மதுவிலக்கு ஓய்ந்த பாடில்லை. தமிழகத்தை ஆளும் கட்சிகளும், தேர்தலின்போது மதுவிலக்கு குறித்த வாக்குறுதிகளை தருகின்றன ஆனால், தேர்தலில் வென்ற பிறகு மதுவிலக்கை குறித்து மறந்துவிடுகின்றன.
இப்படியான தமிழக சூழலில் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் காவலர் விஜயகுமார் என்பவர் குடிபோதையில் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். காயம்பட்ட இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், குடி குடியைக் கெடுக்கும் என்பதற்கு இதை விட கொடுமையான எடுத்துக்காட்டு எதுவும் இல்லை என்றும், ‘’ஒவ்வொரு நாளும், அரசே விற்கும் மதுவால் ஏராளமான குடும்பங்கள் சீரழிகின்றன; ஏராளமான இளம்பெண்கள் கைம்பெண்களாக்கப்படுகின்றனர்; குழந்தைகள் ஆதரவற்றவர்களாகின்றனர்’’ என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தகைய நிலை இனியும் தொடர்வதை அரசு அனுமதிக்கக்கூடாது என்றவர், அரசின் கஜானாக்கள் ’தொழுநோயாளிகளின் கைகளில் உள்ள வெண்ணெய்’களால் நிரப்பப்படக்கூடாது எனவும் தெரிவித்தார். இதோடு, தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.