பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் வருகின்ற மார்ச் மாதம் நடைபெற இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இப்போட்டிகளானது மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 29 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்றும், இவ்வருடம் இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மும்பையில் உள்ள புகழ் பெற்ற வான்கடே மைதானத்திலும், பிரபோர்ன், டிஒய் பாட்டீல் போன்ற மைதானங்களில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறும் என்றும், புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் மீதமுள்ள 15 போட்டிகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 70 போட்டிகள் நடைபெறும். இதன் மூலம் சென்னையில் இம்முறை போட்டிகள் நடைபெறாது என அறியமுடிகிறது.
இம்முறை ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ள பத்து அணிகளும் இம்முறை இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவுக்கு ஐந்து அணிகள் என்று இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குழுவில் உள்ள ஒரு அணி மற்ற நான்கு அணிகளை எதிர்த்து விளையாடும். ஒரு அணிக்கு எதிராக இன்னொரு அணி இருமுறை போட்டி போடும்.
முதலில் குழுக்களுக்குள் போட்டிகள் நிறைவடைந்த பிறகு, ஏ குழுவில் உள்ள அணி பி குழுவில் உள்ள ஒரு அணியுடன் இரண்டு முறையும், மற்ற அணிகளுடன் ஒரு முறையும் போட்டியிடும்.
ஏ குழுவில் உள்ள அணி, பி குழுவில் உள்ள எந்த அணியுடன் இரண்டு முறை போட்டியிடும்? அந்த அணி எவ்வாறு தேர்வு செய்யப்படும் என்ற கேள்வி எழுந்தால் அதற்கான பதில் இதோ!
உதாரணமாக, ஏ குழுவில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது என்றால், இந்த அணிக்கு நேராக பி குழுவில் இடம்பெறும் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் இரண்டு முறையும், மற்ற அணிகளுடன் ஒரு முறையும் போட்டியிடும்! ஒட்டு மொத்தமாக ஒரு அணி 14 லீக் போட்டிகளை விளையாடும்.
குழு ஏவில் உள்ள அணிகள்: மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ்.
குழு பியில் உள்ள அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ்.