இந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகினர். இதில், திமுக அதிகம் இடங்களில் வெற்றி பெற்று இடத்தை தக்கவைத்து கொண்டனர். இதற்கு, கள்ள ஓட்டு மூலம் திமுக வெற்றி பெற்றது என்று அதிமுகவினர் குற்றச்சாற்று முன்வைத்தனர். இந்நிலையில், கோவையில் வாக்குப்பதிவு இயந்திரம் மாறியுள்ளதாகவும் இதனால், 32-வது வார்டில் மறு தேர்தல் நடத்த கோரி 13 வேட்பாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியாளரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் உள்ள 32-வது வார்டில் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில், திமுக வேட்பாளர் பார்த்திபன் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த அதிமுக உள்பட மற்ற வேட்பாளர்கள் ஓட்டுப்பதிவு இயந்திரம் மாறியுள்ளதாக புகார் கூறி கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களை போலீசார் ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேற்றினர். இந்நிலையில், 13 வேட்பாளர்கள் நேற்று கோவை மாவட்ட ஆட்சியாளரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட வேட்பாளர்கள் கூறியவை:
‘வாக்குப்பதிவு இயந்திரத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு பிரிக்கப்பட்டு, முத்திரை அகற்றப்பட்டு இருந்தது. தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது முறையாக பதிலளிக்க மறுத்துவிட்டனர். வாக்குப்பதிவு பெட்டியிலுள்ள இ.வி.எம்., எண்ணை தவிர மற்ற எண்களை பூத் ஏஜன்டுகளுக்கு காட்டாமல் ஓட்டுகளை எண்ண முயன்றனர். பூத் ஏஜன்ட் கையெழுத்துகளும் மாறுபட்டு இருந்தன.
கடந்த 21ம் தேதி இரவு 12.00 மணி முதல் அதிகாலை 3.00 மணி வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால், வாக்குப்பதிவு பெட்டிகளில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. கோவை மாநகராட்சி, 32வது வார்டில் மறு தேர்தல் நடத்த வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியாளரிடம் மனு அளித்துள்ளோம்’ என்று கூறினர்.