நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்று வெளியீட்டுள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதான். இதன்மூலம் ஆளும்கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருக்கிறது. இந்த தேர்தல் 100% சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெற்றிருக்கும். ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. நடந்து முடிந்த தேர்தல் என்பது முழுமையான மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு அல்ல.
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு…’
என்ற அண்ணாவின் பொன்மொழிக்கு ஏற்ப மக்களின் தீர்ப்புக்கு அ.தி.மு.க. தலை வணங்குகிறது. அ.தி.மு.க.வுக்கும், அதன் தோழமை கட்சிகளுக்கும் வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு இந்த தருணத்தில் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். அ.தி.மு.க. இதற்கு முன்புகூட பல தோல்விகளை சந்தித்தாலும், அவற்றில் இருந்து மீண்டு வந்து மகத்தான வெற்றிகளை படைத்து இருக்கிறது.
‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் – தர்மமே மறுபடியும் வெல்லும்’
என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மக்களின் உண்மையான மன நிலையையும், விருப்பத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக ரீதியான வாய்ப்பு விரைவில் அமையும். அந்த நன்னாள் வரும்போது மக்கள் சக்தி வெல்லும், மக்களின் விருப்பப்படி அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெறும். இது நிச்சயம் நடக்கும். அ.தி.மு.க.வினர் எந்தவிதமான தொய்வும் இன்றி எப்போதும் போல் கட்சி பணியை மேற்கொள்ள வேண்டுமென்றும், மக்கள் தொண்டு ஆற்ற வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறி உள்ளார்.