நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிவடைந்துள்ள நிலையில் கட்சி தலைவர்கள் பலரும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். மக்கள் நீதி மையத்தின் நிறுவனரும் தலைவருமான கமல்ஹாசன் அவர்களும் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பலம், பண பலம், கூட்டணி பலம், ஊடக பலம் கொண்டவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட துணிந்த மக்கள் நீதி மயத்தின் வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான் என்றார்.
நாம் அரசியலுக்கு வந்தது மக்கள் பணி செய்வதற்குதான் என்ற கமல்ஹாசன், நீங்கள் போட்டியிட்ட வார்டுகளில் நீங்கள் வென்றதாகவே மக்கள் பணியைத் தொடருங்கள் என்றும், உங்களை வெற்றி பெற செய்யாததை நினைத்து வருந்துமளவிற்கு சேவையாற்றுங்கள் என்றும் கூறினார்.
வெள்ளிக்கொலுசு, ஹாட் பாக்ஸ், அண்டா, பட்டுப்புடவை, ரூ 2000 முதல் ரூ 8000 வரை பணம் என வாக்காளர்கள் விலை பேசப்பட்டபோதும் தன் ஆன்மாவை அடகு வைக்காமல் நேர்மைக்கு வாக்களித்த வாக்காளர்களை போற்றி நன்றி தெரிவிப்பதாகவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். நிதி இல்லாமல் கட்சி தடுமாறிய போது தங்களால் இயன்ற பங்களிப்பை செய்தவர்களுக்கும் கமல்ஹாசன் நன்றி தெரிவித்தார்.
பல இடங்களில் 50 விழுக்காடுக்கும் குறைவான மக்களே வாக்கு செலுத்தியிருக்கும் நிலையை சுட்டிக்காட்டிய கமல்ஹாசன் தமிழகத்தில் நிலவும் ஆபாச அரசியலை மக்கள் விரும்பவில்லை என்பதை இந்நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது என்றார்.
எங்களைப்போன்ற நேர்மையாளர்களை, அரசியலை பணம் குவிக்கும் தொழிலாய் கருதாதவர்களை, வாக்குறுதி தந்துவிட்டு ஏமாற்றாதவர்களை தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு பெருமையும் இல்லை என்றும் எங்களை போன்ற மாற்று சக்திகளின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது என்றும் கடமையில் தவறியவர்கள் உரிமையை இழப்பார்கள் என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
என் எஞ்சிய வாழ்க்கை தமிழக மக்களுக்காகத்தான் என நான்காண்டுகளுக்கு முன் நான் அறிவித்தது வாய்ஜாலம் அல்ல என்றும் தான் வெளியிட்ட அறிக்கையில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.