வண்டலூரில் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து 500 உள்ளூர் நாட்டு மரக்கன்றுகளை நட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழகத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில், நடப்பாண்டில் முதற்கட்டமாக 2.80 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 2022-23 நிதியாண்டில் தமிழகத்தில் 2.8 கோடி மரங்களை நட தமிழக அரசு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காடுகளின் பரப்பை 10 ஆண்டில் 33 சதவீதமாக அதிகரிக்க பசுமை தமிழகம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பேசியதாவது:
ஒவ்வொருவரும் செடி, மரம் வளர்க்க வேண்டும். தமிழகத்தை பசுமைமிகு தமிழகமாக மாற்ற வேண்டும். இயற்கையை காப்பது நம்முடைய இயல்பிலேயே உள்ளது. வளர்ச்சியை நோக்கி செல்லும் போது இயற்கையையும் சேர்த்து காப்பாற்றி வருகிறோம்.
அடுத்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 32 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதற்கட்டமாக 2.50 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இயற்கையை நம்மால் உருவாக்க முடியாது, ஆனால் இயற்கையை நம்மால் காக்க முடியும்.
இயற்கையை காக்க அனைவரும் முன்வர வேண்டும். இயற்கையை காப்பாற்ற பசுமை தமிழகம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இயற்கையைப் பற்றி நமது தமிழ் புலவர்கள் அதிகம் எழுதியுள்ளனர். அனைத்து கோயில்களிலும் சிறப்பு மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இயற்கையை காப்பது என்பது நமது பிறப்பிலேயே உள்ளது.
இதையும் படிங்க: தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு… கோவையில் பதற்றத்தை தணிக்க களமிறங்கிய அதிவிரைவு படையினர்!
அரசும் ஆட்சியும் மட்டுமே இயற்கையை காக்க முடியாது; மக்களும் இணைந்து செயல்பட வேண்டும். இயற்கையை அரசும், மக்களும் காக்க வேண்டும். உலகம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல புல், பூண்டுகளுக்கும் சொந்தமானது. நீர்நிலைகளை நாம் பாதுகாக்க வேண்டும், காற்றை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும்.
பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காகவே நாம் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். மரங்களை வைப்பது, வளங்களை பாதுகாப்பதில் பசுமை தமிழகம் இயக்கம் செயல்பட வேண்டும். காலநிலை மாற்றம் உலகிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
இயற்கையை காத்தல் என்பது மக்களை காப்பது போல் உள்ளது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். வளர்ச்சியை நோக்கி செல்லும் போது இயற்கையையும் சேர்த்து காப்பாற்றி வருகிறோம். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நாட்டு மரங்களை நடுவது அவசியம். பசுமை தமிழகம் இயக்கத்தை வெற்றி பெற செய்வது மக்கள் கையில் தான் உள்ளது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
#ClimateChange – உலகம் உடனே விழித்துக்கொண்டு தடுக்கவேண்டிய மிகப் பெரும் அச்சுறுத்தல்!
நமது அரசு தக்க நேரத்தில் தொடங்கியுள்ள #GreenTNMission நம் பசுமைப் பரப்பைக் காப்பதற்கான இன்றியமையாத முன்னெடுப்பு.
அரசோடு மக்களும் கைகோப்பீர்!
பல்லுயிர் காப்போம்!#பசுமைத்தமிழகம் காண்போம்! pic.twitter.com/YFPYsz7NAg
— M.K.Stalin (@mkstalin) September 24, 2022