தமிழகத்தில் நாளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடக்கவிருக்கிறது.
இந்நிலையில், நாளை நடைபெற இருக்கும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. செய்யப்பட்டும் வருகின்றன. தமிழகத்தில் மொத்தமாக 31,150 வாக்குச்சாவடிகள் இந்த தேர்தலுக்காக ஏற்படுத்தப்பட்டு அவற்றில் 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. நாளை பதிவாகும் வாக்குகள், வருகிற 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
57778 வேட்பாளர்கள் களத்தில் உள்ள இந்த தேர்தலில் சுமார் 2.79 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தமிழகம் முழுவம் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள். மேலும், 1.33 லட்சம் அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.