சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகும் தினத்தன்று அரசு விடுமுறை அளிக்குமாறு கூல் சுரேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வெளிவந்த இத்திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அதன் பின்பு, சமீபத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் ட்ரைலரும், பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வெளியாகும் தினமான செப்டம்பர் 15-ம் தேதி அரசு விடுமுறை வழங்க வேண்டும் என்று நடிகரும் சிம்புவின் ரசிகருமான கூல் சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து கூல் சுரேஷ் கூறும்போது, ‘தமிழக முதலமைச்சருக்கு ஒரு சிறிய வேண்டுகோள். வருகிற செப்டம்பர் 15-ம் தேதி அன்று சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. எனவே அன்று மட்டும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அனைத்து சிம்பு ரசிகர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
பொதுவாகவே, தற்போது கூல் சுரேஷ் பேசுபவை இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இவரின் இந்த பேச்சும் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர். ரஹ்மான், உலகநாயகன் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், கௌதம் வாசுதேவ் மேனன் போன்றோர் கலந்துக்கொண்டனர். மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு இத்திரைப்படத்தின் கதாநாயகன் சிம்பு ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார் என்று பேசப்பட்ட நிலையில் சிம்பு அதை மறுத்தார்.
முன்னதாக, ஏ.ஆர்.ரஹ்மான் – கௌதம் வாசுதேவ் மேனன்- சிம்பு கூட்டணி விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற திரைப்படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.