பிரதமர் மோடி படம் எங்கே?, ரேஷன் அரிசியில் மத்திய அரசின் பங்கு எவ்வளவு? என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.
தெலுங்கானா மாநிலத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள காமரெட்டி மாவட்டத்தில் உள்ள பான்ஸ்வாடவுக்கு நிர்மலா சீதாராமன் சென்றார்.
பான்ஸ்வாடாவில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டிருந்த போது அங்கு பீர்கூரில் உள்ள ரேஷன் கடையில் சீதாராமன் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பிரதமர் நரேந்திர மோடியின் படம் இல்லை என்பதால் அவர் கோபமடைந்தார். ஆதலால், ”பிரதமர் நரேந்திர மோடியின் படம் ஏன் இல்லை? என அவர் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அவர்கள் பதிலளிக்கவில்லை. மாநிலத்தில் பொதுமக்களுக்கு ரூ.1 க்கு ரேஷனில் அரிசி வழங்கப்படுகிறது. இதில் பெரும்பங்கை மத்திய அரசு வகிக்கிறது. இப்படி இருக்கும்போது பிரதமரின் படத்தை வைக்க உங்களுக்கு ஏன் ஆட்சேபனை?” என கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து, காமரெட்டி மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீலை அழைத்த நிர்மலா சீதாராமன், ‛‛ரேஷன் அரிசியில் மத்திய அரசின் பங்கு எவ்வளவு?” என கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை. இதனால், நிர்மலா சீதாராமன் கோபத்துடன் அரை மணி நேரத்தில் இது தொடர்பான விபரங்களை அறிந்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிகழ்வு தெலுங்கானாவில் பெரும் பேசுபொருளாய் மாறியுள்ளது.
இதையும் படிங்க : இனி பிறக்கும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் உதவித்தொகை – தென்கொரியா அதிரடி முடிவு