இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகளுக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பதை அனைவரும் அறிவர். இந்திய கிரிக்கெட் கவுன்சில் செழிப்பாய் இருப்பதற்கு மிக முக்கிய காரணம், ஐபிஎல் போட்டிகள் என்றால் அது மிகையாகாது. வெறுமனே பணம் மட்டும் அல்லாமல், இந்திய கிரிக்கெட் அணிக்கு பல புதிய இளம் கிரிக்கெட் வீரர்களை தந்தருளும் பங்கையும் ஐபிஎல் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.
இந்த முறை ஐபிஎல் போட்டியில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்கின்றன. இம்முறை புதியதாய் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் களம் காண உள்ளது.
இப்படியான சிறப்பு அம்சங்களை கொண்ட ஐபிஎல் போட்டியின் வீரர்களுக்கான ஏலம் கடந்த 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற்றது. சுரேஷ் ரெய்னா ஏலத்தில் விலைக்கு போகாதது என பல திருப்புமுனைகள், பல கேள்விகள், சில ஆச்சரியங்கள் என நீண்டது, ஏலம்.
நடைபெற்ற ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா அணி ரூ.12.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. முந்தைய ஐபிஎல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணி சார்பில் விளையாடினார். இந்த வருடம் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா அணிக்காக விளையாடுவதோடு, கொல்கத்தா அணியை தலைமை தாங்குவார்.
ஆம்! கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு கொல்கத்தா அணிக்கு இயான் மோர்கன் கேப்டன் ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.